சென்னை: உலகின் பல நாடுகளிலும் மருத்துவர்கள் தினம் வெவ்வேறு மாதங்களில் வெவ்வேறு காரணங்களை முன்வைத்து அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் 1991ம் ஆண்டிலிருந்து ஜூலை முதல் நாளை தேசிய மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடி வருகிறார்கள். மருத்துவர்களின் முக்கியத்துவம், பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மருத்துவத் தொழிலை மேம்படுத்தவும் இந்த நாளைப் பயன்படுத்துகிறார்கள். இதை முன்னிட்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இன்று DoctorsDay2020. பிறருக்காகவே வாழும் வாழ்க்கை என்பது மருத்துவர்களது வாழ்க்கை!. கோவிட் 19 நோய்த் தொற்று மனிதசமுதாயத்தையே மிரட்டிவரும் தற்போதைய நிலையில், இந்த உலகம் மருத்துவர்களை மட்டுமே நம்பி உள்ளது! நாடு வாழ, நாம் வாழ மருத்துவர்கள் நலம் வாழட்டும்!, என கூறியுள்ளார்.