ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி காரில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டி மது கடத்திய சினிமா தயாரிப்பாளர், டாக்டர் கைது: 'தண்ணி காட்ட பாத்தாங்க சிக்கிட்டாங்க’

சென்னை: ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி காரில் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டி மதுபாட்டில் கடத்த முயன்ற சினிமா தயாரிப்பாளர், பல் மருத்துவர் போலீசாரிடம் சிக்கினர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. உரிய அனுமதி இல்லாமல் வரும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதுரவாயல் ஆலப்பாக்கம் சந்திப்பு அருகே போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுந்தரவதனம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டி வந்த காரை சந்தேகத்தின் பேரில் மடக்கினர்.

விசாரணையில் தாம்பரத்தை அடுத்த படப்பையை சேர்ந்த கலைச்செல்வம் (34), அவரது நண்பர்  ஆனந்தராஜ் (28) பல் மருத்துவ நிபுணர். இதில் கலைச்செல்வம் தாதா 87 என்ற திரைப் படத்தை தயாரித்தவர் என்று தெரியவந்தது.

இவர்கள் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் உறவினர் என்று கூறி ஒரு போலீஸ் அதிகாரியின் அடையாள அட்டையை போலீசாரிடம் காண்பித்தனர். ஆனால் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் காரில் மதுபாட்டில்கள் கடத்தி வந்ததும்,  மது பாட்டில்களை வெளி மாவட்டங்களிலிருந்து வாங்கிவந்து கூடுதல் விலைக்கு விற்பதற்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து கார், உயர்ரக 240 மதுபாட்டில்களை கைது செய்தனர். மதுபாட்டில்கள் அம்பத்தூர் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 

Related Stories: