ஆசியாவில் முதலிடத்தை பிடித்து பெருமை உலகளவில் நடந்த மாதிரி நீதிமன்ற போட்டி: சென்னை அம்பேத்கர் சட்டப்பல்கலை மாணவர்களை சாதனை

சென்னை: உலக அளவில் நடந்த மாதிரி நீதிமன்ற போட்டியில் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் உலக அளவில் 2ம் இடத்தையும் ஆசிய அளவில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

உலக அளவில் 100 நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட சட்டப்பல்கலைக்கழங்கள் கலந்துகொண்ட மாதிரி நீதிமன்ற போட்டி ஜெர்மனியின் நியூரம்பர்க் அகாடமியில்  கடந்த 19ம் தேதி நடந்தது. இறுதியாக 65 அணிகள் போட்டியில் இறங்கின.

இந்த போட்டியில் சென்னை டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்ட பள்ளி 4ம் ஆண்டு மாணவர்கள் விஜயகிருஷ்ணன், சௌகந்திக்கா, ஹரிணி யாதவ், விஸ்வஜித் மற்றும் 2ம் ஆண்டு மாணவி ஹர்ஷினி ரங்கநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உலகம் முழுவதும் கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தங்களின் வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யும் வகையில் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் உலக அளவில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடத்தை பெற்றனர். ஆசிய அளவில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர். போட்டி முடிவுகள் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் ஹிட்லரின் நாஜிப்படை தோல்வியடைந்த பிறகு, போர் கைதிகள் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட்ட நீதிமன்ற அறையிலிருந்து வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: