சென்னை : தமிழகத்தில் உள்ள ஆசிரியர் கல்வி கல்லூரிகளுக்கு கட்டணங்களை நிர்ணயிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து தமிழக உயர் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்தது. இக்குழு, 2016 ம் ஆண்டு கல்லூரிகளின் செலவுக் கணக்கு விவரங்களைக் கேட்டு, கட்டணங்களை நிர்ணயித்தது. 2016 - 17 முதல் 2018 19 வரையிலான மூன்று கல்வியாண்டுகளுக்கு இந்த கட்டணங்கள் அமலில் இருந்தன. கடந்த 2019 - 20 முதல் 2021 - 22 ம் கல்வியாண்டுக்கான கட்டணங்களை நிர்ணயித்து கட்டண நிர்ணயக் குழு 2019 செப்டம்பர் 12ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், விதிகளை பின்பற்றி கட்டணங்கள் நிர்ணயிக்கப்படவில்லை எனவும், எனவே, கட்டண நிர்ணயக் குழு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் கல்லூரிகள் சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் நடராஜன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.