சென்னை: சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்தவே தற்போது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்ய வீட்டிலிருந்து ஆட்டோ மூலம் அழைத்து வந்து பரிசோதனைக்கு பின்னர் மீண்டும் வீட்டிலேயே வந்து விடும் சேவையை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. சென்னை அடையாறு மண்டலத்தில் 13 வார்டுகள் உள்ளன. இங்கு 1300 தொண்டு நிறுவன முன்கள பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். வீடு வீடாக சென்று மக்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து வரும் இவர்கள், மருத்துவ பரிசோதனை செய்யவேண்டிய தேவை உள்ளவர்கள் பற்றி சென்னை மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கின்றார்கள்.