கொரோனா சிகிச்சைக்கு விலை உயர்ந்த ஊசி மருந்துகளை கொள்முதல் செய்ய முதல்வர் உத்தரவு: அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க விலை உயர்ந்த ஊசி மருந்துகளை கொள்முதல் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும் நோக்கத்தோடு உயிர்காக்கும் விலை உயர்ந்த ஊசி மருந்துகளை தருவித்து பயன்படுத்த முதல்வர் உத்தரவிட்டார். இதனையடுத்து தமிழ்நாடு மருத்துவ பணிகள் சேவை கழகம் மூலம் 1,200 குப்பிகள் டோஸ்லிசுமேப் (Tocilizumab) (400 எம்ஜி), 42,500 குப்பிகள் ரெம்டேசிவிர் (Remdesivir) (100 எம்ஜி) மற்றும் 1,00,000 குப்பிகள் எனோக்ஸ்பெரின் (Enoxaparin) (40 எம்ஜி) ஊசி மருந்துகளை வாங்குவதற்கு கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டு, இதுவரை 1000 குப்பிகள், 1100 குப்பிகள் மற்றும் 1,00,000 குப்பிகள் முறையே பெறப்பட்டுள்ளன.

மீதமுள்ள குப்பிகள் ஓரிருநாட்களில் வந்தடையும்.இந்த உயரிய உயிர்காக்கும் ஊசி மருந்துகள் மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற உயர்தர உயரிய உயிர்காக்கும் மருந்துகளை கொள்முதல் செய்வதும், இம்மருந்துகள் மாவட்ட அளவில் இருப்பில் வைத்துபயன்படுத்துவதிலும் இந்திய அளவில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: