சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 2016 பிப்ரவரி 15 முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இந்நிலையில், தண்டனை காலம் முடியும் 2021ம் ஆண்டுக்கு முன்பாகவே நன்னடத்தை விதியின் கீழ் சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரத்தினர் கூறி வருகின்றனர்.‘சுதந்திர தினத்தையொட்டி வரும் ஆகஸ்ட் 14ம்தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவார்’ என்றும் தகவல்கள் பரவின. டெல்லியில் இருக்கும் பாஜக நிர்வாகி ஆசீர்வாதம் ஆச்சாரி டிவிட்டரில் இதே தகவலை பகிர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, பெங்களூருவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நரசிம்மமூர்த்தி கடந்த மாதம் 14ம் தேதி ‘’சசிகலா (கைதி எண் 9234) எப்போது விடுதலை செய்யப்படுவார்?’’ என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தார்.