சென்னை: கல்பாக்கம் பகுதியில் 10 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தி, அணுமின் நிலையம் உத்தரவிட்டுள்ளது. கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பு பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் 46 வயதான அணுமின் நிலைய தீயணைப்பு வீரர் கொரோனா தொற்றால் பலியானார். மேலும், இப்பகுதியில் ஒரே நாளில் 15 பேருக்கு நோய் தொற்று உறுதியானது. அவர்கள் கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என 45 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், கல்பாக்கம் அணுமின் பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க, நேற்று (27ம் தேதி) முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக அணு மின்நிலைய நிர்வாக இயக்குனர் அருண்குமார் உத்தரவிட்டார்.