சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் கடந்த ஒரு மாதமாக தினசரி ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சியில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 45,814 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 26,472 பேர் குணமடைந்துள்ளனர். 668 பேர் உயிரிழந்துள்ளனர். 18,673 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தவிர்த்து பிற மாவட்டங்களை சேர்ந்த 1,139 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 60.25 சதவீதம் ஆண்கள், 39.76 சதவீதம் பெண்கள். இவர்களில் 58.12 சதவீதத்தினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 40.35 சதவீதத்தினர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 1.47 சதவீதம் பேர் மரணம் அடைந்துள்ளனர்.மண்டலம் வாரியாக பார்க்கும்போது ராயபுரத்தில் 6,837 பேர், தண்டையார்பேட்டையில் 5,531 பேர், தேனாம்பேட்டையில் 5,316 பேர், கோடம்பாக்கத்தில் 4,908 பேர், அண்ணாநகரில் 4,922 பேர், திருவிக நகரில் 3,896 பேர், அடையாறில் 2,777 பேர், வளசரவாக்கத்தில் 1,957 பேர், அம்பத்தூரில் 1,741 பேர், திருவொற்றியூரில் 1,755 பேர், மாதவரத்தில் 1,383 பேர், ஆலந்தூரில் 1,124 பேர், பெருங்குடியில் 916 பேர், சோழிங்கநல்லூரில் 894 பேர், மணலியில் 718 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.