சென்னை: சிபிஎஸ்இ ஜூலையில் நடத்துவதாக இருந்த பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகளை ரத்து செய்துவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் காரணமாக சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் இந்த தேர்வுகள் ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்து இருந்தது. அது குறித்து பல்வேறு பிரச்னைகள் எழுந்ததை அடுத்து தேர்வு நடத்துவது தொடர்பாக உடனடியாக முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக சிபிஎஸ்இ சார்பில் உச்சநீதி மன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் மேற்கண்ட வகுப்பு மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து தேர்ச்சிக்கான மதிப்பெண்கள் வழங்கப்படும்.