பீகார் மாநிலத்தில் இடி மின்னல், மழையால் 83 பேர் பலி: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம்: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு..!!

பாட்னா: பீகார் மாநிலத்தில்  இடி மின்னல், மழையால் 83 பேர் உயிரிழந்ததாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றும் வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதன் காரணமாக குடிநீர் சப்ளை, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இடி மின்னல் மற்றும் மழை தொடர்பான விபத்துகளில் பலர் உயிரிழந்துள்ளனர். பீகாரில் மட்டும் பல்வேறு இடங்களில் இடி மின்னலுக்கு 83 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்த 13-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் ஜார்க்கண்டில் 12 பேர் உயிரிந்துள்ள நிலையில் 28 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாநிலத்தில் ஜூன் 12-ம்தேதி வரை பலத்த காற்று, இடி மின்னலுடன் கூடிய கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறிய நிலையில் இன்று வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். இதனையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுத்து வருகின்றனர்.

Related Stories: