ஆரல்வாய்மொழி: காவல்கிணறு - பார்வதிபுரம் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கும் பணி ரூ.15 கோடி நிதி ஒதுக்கீட்டில் நடந்து வருகிறது. இப்பணி தரமற்ற முறையில் நடப்பதாகவும், தார் போடப்பட்ட சில மணி நேரத்திலேயே ஜல்லிகள் பெயர்ந்து செல்வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் காவல்கிணறு முதல் பார்வதிபுரம் வரை சாலைப்பணி முடிந்து, இருகரையிலும் கொட்டி நிரப்பும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஆரல்வாய்மொழியில் இருந்து முப்பந்தல் வரை மூன்று பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையை ஒட்டிய பகுதியில் பல அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி மண் எடுத்து சாலையின் இரு கரைகளிலும் கொட்டினர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் பாஜக மாவட்ட இளைஞர் அணி பார்வையாளர் பத்பநாபன், தோவாளை ஒன்றிய பொதுசெயலாளர் மாதேவன் பிள்ளை மற்றும் பொதுமக்கள் அங்கு குவிந்தனர். அவர்கள், சாலை ஓரத்தில் மண் தோண்டி எடுக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தொழிலாளர்கள் எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பணியினை செய்து வந்தனர். இதனால் இது குறித்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தியதில் முறைகேடாக மண்ணை எடுத்து ரோட்டின் கரையில் கொட்டியது தெரிய வந்தது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து பணியை நிறுத்தப்பட்டது. வேறு இடத்தில் இருந்து மண் கொண்டு வரப்பட்டு பணி தொடங்கப்படும் என கூறினர். போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.