பைக் திருட்டு இருவர் கைது: 12 வாகனங்கள் பறிமுதல்

புழல்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை போலீசார் மடக்கி நிறுத்தினர். அதில்வந்த இரண்டு வாலிபர்கள் முன்னுக்குப் பின் முரணான பேசினர். அவர்களிடத்தில் முறையான வாகன ஆவணங்கள் இல்லை. இருவரையும் சோழவரம் போலீசார் காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில், சோழவரம் அல்லிமேடு கிராமத்தை சேர்ந்த செல்வம் (26), சரவணன் (28) என்பது தெரியவந்தது.

இவர்கள் கடந்த ஒன்றறை ஆண்டுகளாக சோழவரம், கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை, பொன்னேரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 12 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் மீட்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் உரிய விசாரணைக்குப்பின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொன்னேரி சரக காவல்துறை உதவி கண்காணிப்பாளர் பவன்குமார் தெரிவித்தார்.

Related Stories: