குறைந்த பயணிகளுடன் பறந்த உள் நாட்டு விமானங்கள்

சென்னை: சென்னை விமான நிலையத்தில்  இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு மிகவும் குறைந்த பயணிகளுடன் விமானங்கள் இயக்கப்பட்டன. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய  மாவட்டங்களில்  ஜூன் 19 முதல்  30 வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.  மேலும் மதுரையிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு இருப்பதால் பயணிகளுக்கு இ-பாஸ்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே,  விமானப் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் நேற்று சென்னையிலிருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம், கோவை ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், சென்னையிலிருந்து உள்நாட்டு விமானங்கள் நேற்று குறைந்தளவு பயணிகளுடன் மட்டுமே இயக்கப்பட்டன. சேலம் விமானத்தில் 6 பயணிகள், பெங்களூரு விமானத்தில் 7, தூத்துக்குடி விமானத்தில் 14, திருச்சி 27, மதுரை 42, கவுகாத்தி 4, கொல்கத்தா 9, ஐதராபாத் 28, கடப்பா 10, ராஜமுந்திரி 12, திருவனந்தபுரம் 22 என்று பெரும்பாலான உள்நாட்டு விமானங்கள் காலியாகவே இயக்கப்பட்டன. நேற்று சென்னை விமான நிலையத்தில் 31 புறப்பாடு விமானங்கள், 31 வருகை விமானங்கள் மொத்தம் 62 விமானங்கள் இயக்கப்பட்டன. இதில் பயணிக்க சுமார்  3 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர்.

Related Stories: