சென்னை: அம்பத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட அத்திப்பட்டு பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு கோவிட் கேர் மையமாக மாற்றப்படவுள்ளது. இதனை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சி சார்பில் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில் அறிகுறிகள் உள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து உள்ளனர். அத்திப்பட்டு பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பை கோவிட் கேர் மையமாக மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த பணி இன்னும் ஒரு வாரத்தில் முடியும்.