தமிழகத்தின் முக்கிய வழித்தடங்களில் ரயில் சேவையை நிறுத்தக் கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தின் முக்கிய வழித்தடங்களில் ரயில் சேவையை நிறுத்தக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் போதிய அளவில் வருவாய் ஈட்ட முடியாத வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களின் சேவைகளை நிறுத்துவது குறித்து பரிசீலிக்கும்படி ரயில்வே துறைகளுக்கு இந்திய ரயில்வே வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதனால் சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை ஏராளமான கிளை வழித்தடங்களில் சேவைகளை நிறுத்த வேண்டிய நிலை உருவாகும்.

வட மாவட்டங்களின் வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட திண்டிவனம் - நகரி, திண்டிவனம் - திருவண்ணாமலை, சென்னையிலிருந்து மாமல்லபுரம், புதுச்சேரி, கடலூர் வழியாக கிழக்கு கடற்கரை ரயில் பாதை அமைக்கும் திட்டம் ஆகியவையும் கைவிடப்படக் கூடும். எனவே, வருவாய் இல்லாததைக் காரணம் காட்டி ரயில் சேவைகளை நிறுத்தும் திட்டத்தை இந்திய ரயில்வே வாரியம் கைவிட வேண்டும். அதற்கு பதிலாக ரயில்வே கட்டமைப்புகளை அதிகரித்து, அதிக அளவில் ரயில்களை இயக்கி, அதை முதன்மைப் போக்குவரத்து முறையாக மாற்றவும், அதன்மூலம் வருவாயை அதிகரிக்கச் செய்யவும் ரயில்வே துறை முன்வர வேண்டும்.

Related Stories: