சென்னை: தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக்குழு காலாவதியானதை அடுத்து அந்த குழுவை கலைக்க வேண்டும். அரசு ஒரு மாணவனுக்கு செலவிடும் தொகையான ₹32 ஆயிரத்தை கல்விக் கட்டணமாக வசூலிக்க சம்மதம் தெரிவித்து தனியார் பள்ளிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து தமிழக முதல்வருக்கு, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன் மேனிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் கொடுத்துள்ள மனு: தமிழகத்தில் 20 ஆயிரம் சுயநிதிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக இந்த கட்டணக் குழு இயங்கியும் ஒரு சுயநிதிபள்ளியும் பயன் அடையவில்லை. இந்த குழு நிர்ணயித்த கட்டணத்தால் பள்ளிகளை நிர்வகிக்க முடியாது. கட்டணக் குழுவில் பணியாற்றும் சிலர் பள்ளி நிர்வாகிகளிடம் கைகோர்த்துக் கொண்டு கல்விக் கட்டணத்தை நிர்ணயித்துள்ளனர். கல்விக் கட்டணம் நிர்ணயிக்கும் ஊழியர்கள் யாரும் ஆடிட்டர்கள் அல்ல. அவர்கள் பள்ளி நிர்வாகிகளின் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்த வரவு செலவு கணக்குகளில் எண்ணற்ற முரண்பாடுகள் உள்ளன.