சென்னை: சென்னை மாநகருக்கு குடிநீர் கொண்டு வரும் புதிய திட்டத்துக்கு ₹161 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த 2018ல் வடகிழக்கு பருவமழை பொய்த்ததன் காரணமாக சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் நீர் மட்டம் உயரவில்லை. இதை தொடர்ந்து புதிதாக குடிநீர் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கந்தாடு, வண்டிப்பாளையம் ஆகிய கிராமப்பகுதிகளில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள கழுவேலி ஏரி நீரை நன்னீராக மாற்றி சென்னை குடிநீர் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. நீர்வளத்துறை மேம்பாட்டு குழு சார்பில் இதற்காக, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திட்ட பணிக்கென ₹161 கோடி ஒதுக்கீடு செய்து அரசு செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தின் படி, கழுவேலி ஏரி சென்னையில் இருந்து சுமார் 110 கி.மீ தூரத்தில் உள்ளது.