சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 539 கர்ப்பிணிகளில் 439 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு கொரோனா பரவுகிறதா என்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமாக பரவி வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்ைப கட்டுப்படுத்தும் வகையில் அரசு எடுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகள் பலனை தராத காரணத்தால் மீண்டும் வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் தற்போது வரை 523 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை, அரசு ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை உள்ளிட்ட 4 மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.