சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவை சேர்ந்த பலர் வெளிநாடுகளில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக பிரான்ஸ் நாட்டில் சிக்கிய 138 இந்தியர்கள், டெல்லி வழியாக ஏர் இந்தியா சிறப்பு மீட்பு விமானத்தில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 78 ஆண்கள், 49 பெண்கள், 11 சிறுவர்கள். இவர்களுக்கு குடியுரிமை, சுங்க சோதனை, மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, 14 நாட்கள் தனிமைப்படுத்த 8 பேர், மேலக்கோட்டையூரில் உள்ள கல்வி நிறுவனத்துக்கும், 130 பேர் சென்னை அண்ணாசாலை, மணப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள சொகுசு ஓட்டல்களுக்கும் தனித்தனி பஸ்களில் அனுப்பப்பட்டனர். இதேபோல், ஆஸ்திரேலியாவில் சிக்கி தவித்த 75 பேர், ஏர் இந்தியா சிறப்பு மீட்பு விமானத்தில் சிட்னியில் இருந்து டெல்லி வழியாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 45 ஆண்கள், 29 பெண்கள், 1 குழந்தை. அவர்களுக்கு குடியுரிமை, சுங்க சோதனை, மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்காக 8 பேர் மேலக்கோட்டையூரில் உள்ள கல்வி நிறுவனத்துக்கும், 67 பேர் சென்னையில் உள்ள சொகுசு ஓட்டல்களுக்கும் தனித்தனி பஸ்களில் அனுப்பப்பட்டனர்.