பெரம்பூர் : அயனாவரம் எம்டிஎச் சாலையில் நேற்று மாலை அதிவேகமாக சென்ற கார் ஒன்று சாலையோரம் இருந்த தள்ளுவண்டி கடை மீது மோதியது. அப்போது, காரில் இருந்த நபர் கீழே இறங்கி தள்ளுவண்டிக்காரருடன் வாய் தகராறில் ஈடுபட்டார். தகவலறிந்து அங்கு வந்த தலைமைச்செயலக காவலர் குடியிருப்பு போலீசார் காரில் வந்தவரிடம் விசாரித்தபோது, செம்பியம் கென்னடி சதுக்கம் பகுதியைச் சேர்ந்த ரத்தினகுமார் (50) என்பதும், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிவதும் தெரியவந்தது. அவரது காரை பரிசோதனை செய்தபோது, 100 உயர் ரக மது பாட்டில்கள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ரத்தினகுமார் மீது வழக்கு பதிவு செய்து, சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.