தேசிய திறனாய்வு தேர்வு முடிவு வெளியீடு எப்போது

திருவள்ளூர் :8ம் வகுப்பில் மாணவர்கள் எழுதிய என்எம்எம்எஸ் எனப்படும் தேசிய திறனாய்வு தேர்வு முடிந்து 6 மாதங்களுக்கு மேலாகியும், முடிவு இதுவரை வெளியிடப்படாததால் உடனடியாக முடிவுகளை வெளியிட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.என்எம்எம்எஸ் எனப்படும் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு தோறும் டிசம்பரில் நடத்தப்பட்டு , மார்ச் இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவது வழக்கம்.

2019ம் ஆண்டு டிச. 15ம் தேதி சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். ஆனால் , தேர்வெழுதி 6 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.இத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு முடிய 4 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் ரூ.48 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை பெறமுடியும்.

கொரோனா பேரிடர் காலத்தில் தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டு ஊக்க உதவித் தொகை பெற்று கொடுத்தால். ஏழ்மை நிலையில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள், அரசு உதவிப்பெறும் மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.இதுகுறித்து, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவன தலைவர் சா.அருணன் கூறுகையில், ‘தேசிய திறனாய்வு தேர்வு முடிவினை மாணவர்கள் எதிர்பார்ப்பது குறித்து பள்ளி கல்வி இயக்குனரிடம் கூட்டமைப்பு சார்பில் மனு கொடுத்தும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்றார்.

எனவே, 8ம் வகுப்பில் ஆவலுடன் தேசிய திறனறி தேர்வு எழுதிய மாணவர்களை அரசு ஏமாற்றாமல், முக்கியம் வாய்ந்த இந்த தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: