சென்னை: கொரோனா பாதிப்பை குணமடைய செய்வதில் சித்த மருத்துவம் குறிப்பிடத்தக்க பங்காற்றுகிற நிலையில், அதனை பயன்படுத்தி கொள்ள அரசு முன்வர வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் நோயை சித்த மருத்துவத்தின் மூலம் கொரோனா பாதித்த 183 பேரை, 5 நாட்களில் நலமாக்கி சாதனை படைத்து இருப்பதாகவும், கொரோனா மையங்களைத் தங்களின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்தால் குறுகிய காலத்தில் நோயாளிகளைக் குணப்படுத்திக் காட்டுவதாகவும் சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இது அரசு பரிசீலிக்கப்பட வேண்டிய யோசனை என குறிப்பிடப்பட்டுள்ளது. சித்த மருத்துவ முறையில் 5 நாட்களில் கொரோனா நோயாளிகள் குணமடைவது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அந்த முறையை கடைபிடிப்பதன் மூலம் சென்னையை விரைவில் கொரோனா பாதிப்பு இல்லாத நகரமாக மாற்ற முடியும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.