சென்னை: சென்னையில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் இருந்து வெளியே சுற்றி வந்த 66 பேர் மீது மாநகராட்சி அதிகாரிகள் அளித்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது தொற்றுநோய் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் மாநகரில் தொற்று எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்துள்ளது. தொற்று பாதித்த மண்டலங்களில் பல கட்டுப்பாடுகள் விதித்தாலும் மக்கள் அதை கண்டு கொள்ளாமல் சர்வ சாதாரணமாக வெளியே சுற்றி வருகின்றனர். இதனால் நோய் தொற்றின் வேகம் பரவி வருகிறது. எனவே, தொற்று அதிகமுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் இருந்து வெளியேறும் நபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட தெருக்கள் மற்றும் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.