சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது, என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த தினசரி மருத்துவ முகாம்களை நடத்தும் திட்டத்தை சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. சென்னையில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் வார்டு வாரியாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று முன்தினம் 203 இடங்களில் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்களில் 10 ஆயிரத்து 541 பேர் பங்கேற்றனர். இதில் 392 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.