பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க டெண்டர் வழங்கியதில் முறைகேடு: ஆர்.எஸ்.பாரதியின் மனுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை பதில்தர ஐகோர்ட் ஆணை!

சென்னை: பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு என்று தொடுக்கப்பட்ட வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெண்டர் முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட கோரி ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து, முறைகேடு தொடர்பாக முதலமைச்சர், வருவாய்த்துறை அமைச்சர்கள் மீது வழக்குபதிய ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 524 கிராமங்களில் பைபர் ஆப்டிக் கேபிள் வழங்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த டெண்டரில் கலந்துகொண்ட பெரும்பாலான நிறுவனங்களை விட்டு விட்டு, குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களுக்கு மட்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அரசு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், இதில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி வழக்கு தொடர்பாக நாளை மறுதினம் லஞ்ச ஒழிப்புத்துறை ஆர்.எஸ் பாரதி கொடுத்த மனுவில் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?  தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கை எந்த நிலையில் இருக்கிறது ? என்று பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகின்ற 18ம் தேதி ஒத்திவைத்தார்.

Related Stories: