சென்னை: தமிழகத்தில் வாகன ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால், அவர்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அனைந்திந்திய ஓட்டுனர்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் முனைவர் எம்.எஸ்.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தன் நலம் கருதாது, பிறநர் நலம் காக்கும் ஓட்டுனர்கள் இந்த கால கட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 மாத காலமாக வாகனங்கள் ஓடவில்லை. மக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாத நிலையில், அனைத்து வாகனங்களுக்கு உரிய காலாண்டு வரியை ரத்து செய்யாமல் செலுத்த சொல்வது வருந்தத்தக்கது.