கொரோனா பரவலை தடுக்க மெட்ரோ ரயில் நிலையங்களில் டோக்கன் விநியோகம் நிறுத்தம்: அதிகாரி தகவல்

சென்னை: சென்னையில் மொத்தம் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. இரண்டு வழித்தடங்களில் செயல்படும் மெட்ரோ ரயில் சேவையை நாள்தோறும் 1 லட்சம் பேர் வரை பயன்படுத்தி வந்தனர். ஊரடங்கு தளர்வுக்கு பிறகு சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகளை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு ரயில் சேவையை தொடங்கும் போது நிலையங்களில் கொரோனா பரவலை தடுக்க டிக்கெட் (டோக்கன்) வழங்கும் நடைமுறை ரத்து செய்யப்படும் என மெட்ரோ ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: மெட்ரோ ரயில் நிலையங்களில் கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் கால்களின் மூலம் லிப்ட்களை இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதேபோல், நிலையங்களில் சமூக இடைவெளி கோடு வரைதல் பணி முழுமையாக முடிந்துள்ளது. ஒவ்வொரு நிலையத்திற்கும் 3 அதிகாரிகள் வீதம் மொத்தம் 100 அதிகாரிகள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல், சேவை தொடங்கப்பட்டால் தெர்மல் ஸ்கேனர் செய்த பிறகே பயணிகள் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும், நிலையங்களில் டோக்கன் நடைமுறையை நிறுத்தி வைக்கவும் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மாதாந்திர பயண அட்டை மற்றும் பேப்பர் டிக்கெட் மூலம் பயணம் செய்வதை நிர்வாகம் ஊக்குவிக்க இருக்கிறது. தானியங்கி டோக்கன் வழங்கும் இயந்திரத்தின் பயன்பாடும் நிறுத்தப்பட உள்ளது. டோக்கனை அனைவரும் பயன்படுத்தும் போது கொரோனா பரவலுக்கு அது வழிவகுக்கும் என்பதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இவ்வாறு கூறினார்.

Related Stories: