சென்னை: உடல்பருமன் அதிகமாக இருப்பவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் போது உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உலகம் முழுவதும் 215 நாடுகளை பாதித்துள்ள கொரோனா வைரஸ் வயதானோரையும், உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டோரையும் அதிகம் தாக்கும் என்று ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக உடல்பருமன் அதிகமாக இருப்போரும் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள் என்று அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் உடல் பருமன் அதிகம் இருப்போர் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. உடல் பருமனில் அதிகபட்சமாக உள்ள முதல் 5 நாடுகளில் இந்தியாவும் உள்ளது. 25 சதவீதத்துக்கும் அதிகமான நபர்கள் உடல்பருமன் உடையவர்களாக இருக்கின்றனர். தமிழ்நாட்டில் பெண்களில் சுமார் 30 சதவீதமும், ஆண்கள் 28 சதவீதமும் உடல்பருமன் உடையவர்களாக இருக்கின்றனர். ஒருவருடைய உடல் எடை, அவரது உயரத்திற்கு ஏற்றபடி தான் இருக்க வேண்டும்.