சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில், விவசாயிகள் மிளகு சாகுபடி செய்துள்ளனர். சில்வர் ஓக் மரங்களை தோட்டத்தில் நடவு செய்யப்பட்டு, அதில் மிளகு கொடிகள் ஏற்றி விட்டுள்ளனர். தவிர, தோட்டத்தில் ஊடுபயிராக காப்பி செடிகள் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக வளப்பூர்நாடு அருகே இளமாத்திப்பட்டி என்ற இடத்தில் உள்ள மிளகு தோட்டத்தில் ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்து உள்ளன. அவை மிளகு மற்றும் காப்பி செடிகளில் உள்ள இலைகளை சாப்பிட்டு வருகின்றன. இதனால் செடிகள் அனைத்தும் இலைகளின்றி மொட்டையாக காட்சியளிக்கிறது. இதனால், அதிர்ச்சியடைந்த விவசாயிகள், இதுகுறித்து கொல்லிமலை வேளாண் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.