கல்லூரி, பல்கலை. தேர்வுகள் ரத்தா? அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி

தர்மபுரி:  கல்லூரி, பல்கலைக்கழக  தேர்வுகளை ரத்து செய்வது குறித்து  முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக் கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தர்மபுரி  மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கிருமி நாசினி தெளிக்கும் புதிய  இயந்திரத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் துவக்கி வைத்தார்.  கலெக்டர் மலர்விழி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், இதுவரை  8971 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 23 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் சிகிச்சையில் குணமடைந்து 10 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

செட்டிக்கரையில் உள்ள பொறியியல் கல்லூரி கொரோனா தனிமைபடுத்தும் மையத்தில், 124 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி உள்பட கல்லூரிகள் அனைத்தும், கொரோனா  சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று  முழுமையாக கட்டுக்குள் வரும் சூழ்நிலையில், கல்லூரிகளை மீண்டும் திறக்க நடவடிக்கை  எடுக்கப்படும். கல்லூரி, பல்கலைக்கழக  தேர்வுகளை ரத்து செய்வது குறித்து, முதல்வருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: