சென்னை: காவிரியில் இருந்து ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கான 40 டி.எம்.சி நீரை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என நேற்று நடந்த காவிரி ஆணைய கூட்டத்தில் கர்நாடகாவுக்கு அதிரடி உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரி ஆணையத்தின் 6வது கூட்டம் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைவர் ராஜேந்திர குமார் ஜெயின் தலைமையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று நடந்தது. இதில் நான்கு மாநிலத்தின் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பாக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன், திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, காவிரி தொழில்நுட்ப குழு உறுப்பினர் பட்டாபிராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.