சென்னை: கொரோனா நோய் அதிகமாக பரவியுள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியே வந்தால் தனி மையங்களில் அடைக்கப்படுவார்கள் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார். திருவொற்றியூர் மண்டலத்தில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் உதயகுமார், 700 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பை வழங்கினார். பின்னர் அந்த மண்டலத்தில் நோய் தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார். அவருடன், சென்னை மாநகர கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், கண்காணிப்பு அலுவலர் காமராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் தற்போதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. மண்டலங்களுக்குள் செல்வதற்கு கூட சென்னையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று உள்ள பகுதிகளை கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அத்தியாவசிய தேவை, தொழில் தேவைக்காக மட்டுமே பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.