சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வுக்கு பொறுப்பு வகித்த இணை இயக்குநருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தற்போது தேர்வுத்துறை இயக்குநருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த துறையில் மேலும் 7 பேருக்கும், அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக அனைத்து நிறுவனங்கள் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கி வருகின்றன. இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு நடத்துவதற்கான பணியில் தேர்வுத்துறை பணியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தேர்வுத்துறை உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி தனது அலுவலகத்தை மாற்றிக் கொண்டு வேறு அலுவலகத்துக்கு சென்றார். இதனால் தேர்வுத்துறையில் உடனடியாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் பணிக்கு வரும் ஊழியர்கள் கைகளை கழுவுதல், சானிடைசர் பயன்படுத்துவது என்று அனைத்து சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.