சென்னை: 10ம் வகுப்பு தேர்வு ரத்து என்பது மிகவும் காலம் கடந்து எடுத்த முடிவு என்றாலும் வரவேற்கிறோம் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ராமதாஸ் (பாமக நிறுவனர்): ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்பார்த்த முடிவை முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது ஆபத்தான சூழலில் தேர்வு எழுத வேண்டுமா என அஞ்சிக் கொண்டிருந்த மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மிகுந்த நிம்மதியை அளித்திருக்கிறது.
வைகோ (மதிமுக பொது செயலாளர்): அரசுக்கு எச்சரிக்கை மணி அடித்த சென்னை உயர் நீதிமன்றத்திற்கு தலைவணங்கி நன்றி செலுத்துகிறேன். திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் இன்று நடத்துவதாக அறிவித்த அறப்போராட்டமும், இதற்கு ஒரு காரணம் என்பதில் மகிழ்கிறேன். ஜி.கே.வாசன் (தமாகா): 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவித்து இருந்தும் கூட அவை காலாண்டு தேர்வு, மற்றும் அரையாண்டு தேர்வில் கொடுக்கப்பட்டுள்ள மதிப்பெண்கள் 80 சதவீதம் மற்றும் வருகை பதிவிற்கு 20 சதவிகிதம் போன்றவற்றின் அடிப்படையிலும் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. கே.பாலகிருஷ்ணன் (சிபிஎம் மாநில செயலாளர்):பொதுத்தேர்வு நடந்தால் மோசமான விளைவுகளை உருவாக்கும் என்ற அச்சத்தின் காரணமாக, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஜூன் 10ம் தேதி போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டன. இப்போது பொதுத்தேர்வு இல்லை என்ற முடிவுக்கு தமிழக அரசு வந்துள்ளது. இம்முடிவை வரவேற்கிறோம்.
முத்தரசன் (சிபிஐ மாநில செயலாளர்): தமிழ்நாடு அரசு பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருக்கிறது. இது மக்கள் நடத்திய தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். காலம் கடந்தாவது மக்கள் உணர்வை ஏற்றுக் கொண்ட மாநில அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. காதர் மொகிதீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்): மாணவ, மாணவியரின் பெற்றோர்களின் உள்ளங்கள் மகிழ்சியில் மூழ்கியுள்ளன. தமிழக முதல்வருக்கு எல்லோரும் நன்றி தெரிவிப்போம். எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக தலைவர்): காலந்தாழ்த்திய அறிவிப்பு என்றாலும் சுமார் 9 லட்சம் மாணவர்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க இந்த அறிவிப்பு பெரிதும் உதவியாக இருக்கும். திருநாவுக்கரசர் (தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர்): திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட தோழமை கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் அறிவிக்கப்பட்டது. நம் வேண்டுகோளை ஏற்று 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்தும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த முதல்வர் மற்றும் கல்வி அமைச்சருக்கும் நன்றி.
சரத்குமார் (சமக தலைவர்): கொரோனா தொற்று பரவல் சூழலில், 10, 11ம் வகுப்பு மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொது தேர்வு குறித்த ஐயத்தில் இருந்த பலரின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் மாணவ, மாணவிகளை தேர்வின்றி தேர்ச்சி செய்து சிறப்பான முடிவை அறிவித்திருக்கும் தமிழக அரசின் முடிவை வரவேற்கிறேன். மேலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக் மற்றும் பல்வேறு கட்சியினர் கருத்து தெரிவித்தனர். கொள்கையில் உறுதி இல்லைதேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டன அறிக்கை, ‘தமிழக அரசு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என்ற முடிவை முன்கூட்டியே தெளிவாக எடுத்து இருந்தால் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என யாரும் குழப்பம் அடையாமல் தெளிவாக இருந்திருப்பார்கள். அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்தால், அதில் உறுதியாக இருக்க வேண்டும். அதை விடுத்து நாளும் ஒரு நிலைப்பாடு எடுப்பதை தவிர்க்க வேண்டும். மேலும், “கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்” என்பது போல் காலம் கடந்து எடுக்கப்பட்ட இந்த முடிவை உரிய நேரத்தில் அறிவித்திருந்தால் தேமுதிக அதனை வரவேற்றிருக்கும்’ என தெரிவித்துள்ளார்.