சென்னை: அடுத்த 48 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியின் ஒருசில இடங்களில் லேசான மழையும், அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியின் ஒருசில இடங்களில் சேலான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 38 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியசும் நிலவும். கடந்த 24 மணி நேரத்தில் வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லேசான மழை பெய்துள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.