ஆண்டிபட்டி: கொரோனா ஊரடங்கால் போதிய ஆர்டர்கள் இன்றி ஆண்டிபட்டி பகுதியில் ரூ.10 கோடி மதிப்பிலான காட்டன் சேலை மற்றும் வேட்டிகள் தேக்கமடைந்துள்ளன. இவற்றை சந்தைப்படுத்த தமிழக அரசு உதவ வேண்டும் என நெசவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம், சண்முகசுந்தராபுரம், கொப்பையம்பட்டி, முத்துகிருஷ்ணாபுரம் ஆகிய ஊர்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு சுங்குடி, செட்டிநாடு, பேப்பர், காரைக்குடி, கோடம்பாக்கம் ஆகிய காட்டன் வகை சேலைகளும், வெள்ளை மற்றும் வண்ண நிறத்தில் வேட்டிகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. தினசரி ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் மதிப்பிலான சேலை மற்றும் வேட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இவை மதுரை, விருதுநகர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா, குஜராத், கேரளா ஆகிய வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.