செங்குன்றம் அருகே வீட்டை உடைத்து நகை கொள்ளை

புழல்: செங்குன்றம் அருகே வீட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். செங்குன்றம் அருகே பாடியநல்லூர் ஊராட்சி எம்.ஏ.நகர், நேதாஜி தெருவை சேர்ந்தவர் ரவி (55). இவர், செங்குன்றத்தில் உள்ள லாரி புரோக்கர் அலுவலகத்தில் வேலை செய்கிறார். இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்குள் புழுக்கம் அதிகமாக இருந்ததால், அருகே உள்ள மற்றொரு வீட்டின் மாடியில் குடும்பத்துடன் தூங்கினார்.

பின்னர், நேற்று காலை ரவி எழுந்து வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சிடைந்தார்.அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 3 சவரன் நகை மற்றும் ₹10 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இப்புகாரின்பேரில், செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகள் மூலம் மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: