சென்னை: மேடவாக்கம் அடுத்த ராஜகீழ்ப்பாக்கம் டெல்லஸ் அவென்யூவை சேர்ந்தவர் சாம்குமார் (33). கால் டாக்சி ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் அதே பகுதியில் நடந்து சென்றபோது, அங்கு வந்த 5க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் திடீரென சாம்குமார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இவை பயங்கர சத்தத்துடன் வெடித்ததால், அவ்வழியே சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். படுகாயமடைந்த சாம்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து, மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர். தகவலறிந்து வந்த பள்ளிக்கரணை போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து, சந்தேகத்தில் பேரில் சைதாப்பேட்டையை சேர்ந்த ராகேஷ் என்பவரை பிடித்து விசாரித்தனர்.