சின்னத்திரை நடிகர்களான அண்ணன், தங்கை தற்கொலை: வறுமை காரணமா என விசாரணை

சென்னை: சின்னத்திரை நடிகர்களான அண்ணன், தங்கை தற்கொலை செய்து கொண்டனர். ஊரடங்கால் ஏற்பட்ட வறுமையின் காரணமாக அவர்கள் இறந்தனரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.  சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் ஐந்தாவது பிளாக் 115வது தெருவில் ஒரு வீட்டிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற கொடுங்கையூர் போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது அழுகிய நிலையில் இரு உடல்கள் கிடந்தன. படுக்கையறை மெத்தையில் ஆண் சடலமும் மற்றொரு அறையில்  பெண் சடலமும்  கிடந்தது. இவர்களுக்கு 45 வயதிலிருந்து 50 வயதிருக்கும்  என  போலீசார் தெரிவித்தனர்.

இருவரின் உடல்களையும் கைப்பற்றிய கொடுங்கையூர் போலீசார் அவர்களது உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் சோதனை செய்து பார்த்தபோது சின்னத்திரை நடிகர் சங்க அடையாள அட்டை இருந்தது. வீட்டில் வசித்து வந்த தர், ஜெய கல்யாணி ஆகிய இருவர்தான் இறந்திருக்கக்கூடும் என கூறப்படுகிறது.  இவர்கள் இந்த வீட்டிற்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆகின்றன.   இறந்த இருவரின் அம்மா மற்றும் அண்ணன் ஆகிய இருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது. சடலமாக கிடந்த இருவரும் அண்ணன், தங்கை.  இருவருக்கும் திருமணம் ஆகவில்லை என்பதும் தெரிந்தது.  கொரோனா ஊரடங்கால் எந்தவித ஷூட்டிங்கும் இல்லாத காரணத்தால் வறுமையால் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதாவது பிரச்சனை உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: