காட்மேன் இணையத்தள தொடரின் இயக்குனர், தயாரிப்பாளருக்கு 2வது முறையாக சம்மன்; ஆஜராகாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: மத்திய குற்றப்பிரிவு போலீசார் எச்சரிக்கை

சென்னை: காட்மேன் இணையத்தள தொடரின் இயக்குனர், தயாரிப்பாளருக்கு 2வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற 6ம் தேதி காலை 10 மணிக்கு ஆஜராகாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  குறிப்பிட்ட சமூகத்தை பற்றி அவதூறாக காட்மேன் சீரிஸில் வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக புகார் இருந்தது.

அண்மையில் வெளியான காட்மேன் வெப் சீரிஸ் டீசரால் பெரும் சர்ச்சையில் சிக்கிய சமூக வலைத்தள  தொடர் காட்மேன், ஜெய் பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் என பலர் இந்த வெப் சீரிஸில் நடித்திருந்தனர். பாபு யோகேஸ்வரன் இயக்கியிருந்த இந்த வெப் சீரிஸ் இந்து கடவுளை அவமதிக்கும் வகையிலும், பிராமண சமூகத்தை இழிவுபடுத்தி வசனங்களும், ஆபாச காட்சிகளும் இருந்ததாக சர்ச்சையில் சிக்கியது.

இதனால் இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் மீது கடும் எதிர்ப்பு கிளம்பியது. சென்னை காவல்துறையில் படக்குழு மீது இந்து முன்னணி அமைப்பு புகார் அளித்தது. இதனால் காட்மேன் சீரிஸ் பட குழுவுக்கு போலிசார் வழக்கு பதிவு செய்து சம்மன் அனுப்பினர். ஏற்கனவே முதல் சம்மனுக்கு ஆஜராகாத நிலையில் 2வது முறையாக சம்மன் அனுப்பிய நிலையில் 6ம் தேதி காலை 10 மணிக்கு ஆஜராகாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: