சென்னை: தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்கள் நேற்று இயக்கப்பட்டது. இ பாஸ் பெற வேண்டும் என்ற கட்டாயத்தால் இதில் சென்ற பயணிகள் கடும் அவதிப்பட்டனர். கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து கோவை - மயிலாடுதுறை, மதுரை - விழுப்புரம், திருச்சி - நாகர்கோயில், கோவை -காட்பாடி ஆகிய 4 மார்க்கத்தில் தலா ஒரு ரயிலை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்தது. இதற்கான முன்பதிவு சில தினங்களாக நடந்தது.இந்நிலையில், நேற்று ரயில் போக்குவரத்து துவங்கியது. மண்டலம் விட்டு மண்டலம் செல்பவர்கள் இ பாஸ் கட்டாயம் பெற வேண்டும் என்றும், மண்டலங்களுக்குள் செல்பவர்களுக்கு இ.பாஸ் தேவையில்லை என்றும் அரசு அறிவித்துள்ளது.தமிழக அரசின் இந்த திடீர் அறிவிப்பால் ஏற்கனவே ரயில்களில் செல்ல முன்பதிவு செய்த பயணிகள் அவசர அவசரமாக இ-பாஸ் பெற முயற்சித்து கடும் அவதிப்பட்டனர். பயணிகளின் சிரமத்தை குறைக்க சில ரயில் நிலையங்களிலே இ-பாஸ் வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.