சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த 68 நாட்களாக ஊரடங்கு அமலில் இருந்தது. ஆனாலும் சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. கடந்த 2 வாரங்களாக சென்னையில் தினசரி 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் மட்டும் தமிழகத்தில் 1,149 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றும் சென்னையில் 900க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. கொரோனாவை தடுக்க அரசும், சென்னை மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், பொதுமக்களிடம் இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றும், அரசின் அறிவிப்புகளை அலட்சியப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட் பகுதியில் மக்கள் சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் இல்லாமல் சர்வ சாதாரணமாக நடமாடி வருகிறார்கள். போலீசாரும் மாஸ்க் அணியாமல் வந்தால் அபராதம் விதித்து வருகிறார்கள். ஆனாலும், கொரோனா தொற்று குறைந்தபாடில்லை.