வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து சமய தலைவர்களுடன் நாளை தலைமை செயலாளர் ஆலோசனை

சென்னை: சமய வழிபாட்டு தலங்களை எப்போது திறக்கலாம் என்பது பற்றி சமய தலைவர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் நாளை ஆலோசனை நடத்துகிறார்.  ஊரடங்கால் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் 8ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் இதுபற்றி சமய தலைவர்களுடன் ஆலோசனை நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக சமய தலைவர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்கும் பொருட்டு பொதுமுடக்கத்தால் மூடப்பட்டுள்ள சமய வழிபாட்டுத் தலங்களை வரும் 8ம் தேதி முதல் திறக்கலாம் என மத்திய அரசு அறிவிப்பு செய்துள்ளது.

இதன் அடிப்படையில் கொரோனா தொற்றின் நிலையைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிலுள்ள சமய வழிபாட்டுத் தலங்களை எப்போது திறக்கலாம் என்று பற்றியும், அவ்வாறு திறக்கும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றியும் கருத்துக்களை பெற 3ம் தேதி (நாளை) மாலை 4.45 மணிக்கு சென்னை தலைமை செயலகம், பழைய கட்டிடம் 2வது தளத்திலுள்ள கூட்ட அரங்கில் சமயதலைவர்களுடன் எனது தலைமையில் ஆலோசனை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: