திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள புலிகளை துல்லியமாக கணக்கெடுக்க 300 நவீன கேமராக்களை வனத்துறையினர் பொருத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வன விலங்குகளை ஒவ்வொரு ஆண்டும் வனத்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர். இதில் தனியாக கேமராக்கள் பொருத்தி புலிகளை மட்டும் கணக்கெடுக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. இந்த ஆண்டும் திருவில்லிபுத்தூர் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் வசிக்கும் புலிகளை துல்லியமாக கண்டறிய வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். கடந்த ஆண்டு வைத்த கேமராக்களில் எந்த இடங்களில் புலிகள் அதிக அளவு பதிவானது என்பதை ஆய்வு செய்து அந்த இடங்களில் அதிநவீன கேமராக்களைப் பொருத்த வனத்துறையினர் முடிவு செய்தனர். இப்பணி இன்று முதல் துவங்குகிறது.