சென்னை: அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான 6000 ஏக்கர் நிலங்களை குத்தகைக்கு விடாததால் கோயில்களுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரத்து 120 கோயில்கள் உள்ளன. இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதான கோயில்களும் அடக்கம். இக்கோயில்களுக்குச் 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் மற்றும் 50 ஆயிரம் கட்டிடங்கள் உள்ளது. இந்த நிலங்கள் மற்றும் கட்டிடங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் தான் கோயில்களின் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஒவ்வொரு ஆண்டும் குத்தகைக்கு விடப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இந்த குத்தகைக்கு விடப்படும். இந்த குத்தகை காலம் முடிந்த பிறகு மீண்டும் அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பில் ஏலம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு குத்தகைக்கு விடப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களும் மூடப்பட்டன. தற்போது கோயில்களில் உயர் அலுவலர்களை தவிர்த்து யாரும் பணிக்கு வரவில்லை.