சென்னை: தென்மேற்கு பருவமழை இன்று முதல் கேரளாவில் தொடங்குவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று வெயில் குறைவாக இருந்தது. இரண்டு மாவட்டங்களில் மட்டும் வெயிலின் தாக்கம் 40டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருந்தது. பிற மாவட்டங்களில் சராசரியாக 38 முதல் 39 டிகிரி செல்சியசாக இருந்தது. இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 70 மிமீ மழை பெய்துள்ளது. வால்பாறை, ஆலங்காயம், திருப்பூர் 30மிமீ, சூளகிரி 20 மிமீ மழை பெய்துள்ளது. இது தவிர ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்துள்ளது. இதையடுத்து, வெப்ப சலனம் காரணமாக தென் தமிழகம், உள் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.