காவேரிப்பாக்கம்: காவேரிப்பாக்கத்தில் வாழ்விழந்து தவிக்கும் வாழை விவசாயிகள் 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிட்ட வாழை வீணாகிப்போனதே என்று கதறி வருகின்றனர். வட தமிழகத்தின் 3வது பெரிய ஏரியாகவும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மிகவும் பெரிய ஏரியாகவும் விளங்கி வருவது காவேரிப்பாக்கம் ஏரி. இந்த ஏரியின் மொத்த பரப்பளவு 3ஆயிரத்து 968 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது. இந்த ஏரியானது ஒரு முறை நிரம்பி வழிந்தால் 12மாதங்கள், அதாவது 3 போகம் அறுவடை செய்யலாம் என்பது இந்த ஏரியின் சிறப்பு தன்மையாக உள்ளது..இந்த ஏரியில் இருந்து நரிமதகு, சிங்க மதகு, மூலம் மதகு, பள்ளமதகு, கிழவன் மதகு, உள்ளிட்ட 10 மதகுகள் வாயிலாக கால்வாய் மூலம் நேரடியாக தண்ணீர் பெறப்படுகின்றன. இதன் மூலம் காவேரிப்பாக்கம், கட்டளை, அய்யம்பேட்டைசேரி, அத்திப்பட்டு, உள்ளிட்ட 14 கிராமங்களில் சிறிய சிறிய ஏரிகள் நிரப்பப்படுகின்றன. இதன் வாயிலாக சுமார் 6ஆயிரத்து 278 ஏக்கர் நிலப்பரப்பில் தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்யப்படுகின்றன.மேலும் இந்த ஏரிக்கரையின் கீழ்ப்பகுதியில் காவேரிப்பாக்கம், கட்டளை, அய்யம்பேட்டைசேரி, உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய பயிராக வாழையை பயிரிட்டு வருகின்றனர். இவ்வாறு பயிரிடப்படும் வாழை மரம், வாழைக்காய், வாழை இலை, வாழைப் பூ, வாழைத் தண்டு ஆகியவற்றை அறுவடை செய்துபெங்களூர், ஒசூர், சித்தூர், வேலூர், காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தனர். இதனால் காவேரிப்பாக்கம் பகுதியில் வாழை பயிரிடப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நல்ல லாபமடைந்து வந்தனர்.