பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அடுத்த வெளியகரம் பழைய காலனியில் 120க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக பொது வழி ஒன்றை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், அந்த பொது வழி தனக்கு சொந்தமானது என்று அதே கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் சாலையில் வீடு கட்டும் பணிகள் தொடங்கியுள்ளார். இதுகுறித்து கிராம மக்கள் வருவாய் துறையினரிடம் புகார் செய்தனர், நேற்று வட்டாட்சியர் செல்வகுமார் தலைமையில் வருவாய் துறையினர் குறிப்பிட்ட இடத்தை சர்வே செய்துக்கொண்டிருந்தனர். அப்போது, பொது வழியில் வீடு கட்டும் நபருக்கு ஆதரவாக வட்டாட்சியர் செயல்படுவதாக கூறி 130க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது குடும்ப அட்டைகளை சாலையில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.