வருசநாடு: கொரோனா ஊரடங்கால் கடமலை-மயிலை ஒன்றியத்திற்கு, வெளியூர் வியாபாரிகள் வருகையில்லாததால், மிளகாய்க்கு போதிய விலை கிடைக்காமல், அவைகளை வற்றலாக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் சம்பா, மோட்டா, புல்லட் என மூன்று வகையாக மிளகாய்களை பயிரிடுகின்றனர். தற்போது மிளகாய்களை அறுவடை செய்யும் நேரத்தில், கொரோனா ஊரடங்கால் வாகன போக்குவரத்தின்றி வெளியூர் வியாபாரிகள் வராததால், மிளகாய்க்கு போதிய விலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்குக்கு முன் கிலோ ரூ.25 முதல் 30 வரை போன மிளகாய் தற்போது கிலோ, ரூ.10லிருந்து ரூ.15 வரை விலை போவதாக கூறப்படுகிறது.